தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் கனமழை: ஒரே மாதத்தில் 2-ஆவது முறையாக நிரம்பிய அடவி நயினார் அணை
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அடவி நயினார் அணை இரண்டாவது முறையாக நிரம்பி வடிகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக மலை பகுதியையொட்டியுள்ள நீரோடைகள், ஆறுகள், அருவிகள் அணைக்கட்டுகள் அனைத்திலும் நீர்வரத்து பெரும் அளவு அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான மேக்கரையில் உள்ள அடவி நயினார் அணை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நிரம்பி வடிகிறது.
132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த மாதம் 27ஆம் தேதி நிரம்பி வடிந்தது. அதன் பிறகு விவசாயத்துக்காக தண்ணீர் விடப்பட்டதால் அணை நீர் வரத்து மெதுவாக குறைந்தது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக அணை மீண்டும் நிரம்பி வடிகிறது. தற்போது அணைக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், அணை நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது.
அதனால் நதியின் கரையோர பகுதி மக்கள் ஆற்றுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே குற்றால அருவிகள் அனைத்திலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியை பொறுத்தவரை இன்று வரை 5வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.