Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹரித்வார் கோயில் விழாவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

ஹரித்வார்: ஹரித்வார் மானசா தேவி கோயில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மானசா தேவி கோயிலில் இன்று புனித சிரவண மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கர்வால் சரக ஆணையர் வினய் சங்கர் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உடனடியாக மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் மாதா கோயிலில் நவராத்திரி விழாவின் போது, பாலம் இடிந்து விழுவதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதேபோன்ற ஒரு சோகச் சம்பவம் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.