Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளுநர் வழக்கு தீர்ப்பில் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர் -ஆகஸ்ட் 19ம் தேதி விரிவான விசாரணையைத் தொடங்கும் உச்சநீதிமன்றம்

டெல்லி : ஆளுநர் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குடியரசு தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கேரள அரசுகள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மீண்டும் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகினர். இருதரப்பிலும் வாதிட குறைந்து 8 நாட்கள் தேவை என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார். ஒன்றிய அரசின் மனு நிலை நிற்பதா? இல்லையா?என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால் கேட்டுக் கொண்டார். இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் மனு நிலைநிற்குமா? இல்லையா என்பது குறித்து ஆகஸ்ட் 19ல் முதலில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி விளக்கம் கேட்டதை ஆதரிக்கும் மனுதாரர்கள் வாதத்தை ஆக. 19, 20,21, 26 தேதிகளில் வைக்க வேண்டும் என்றும் விளக்கம் கோரியதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் வாதத்தை ஆக. 28, செப்,2,3,9 தேதிகளில் வைக்க வேண்டும் என்றும் மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என இரு தரப்புக்கும் வாதம் வைக்க 1 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் ஆக. 12ம் தேதிக்குள் அனைத்து தரப்புகளும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.