அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்
சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் அலுவலர்களுக்கு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன்படைத்த மனித வளத்தை உருவாக்கி, தொழில் நிறுவனங்களின் தேவையினை பூர்த்தி செய்வதையும், மாணவர்களிடம் சுயதொழில் தொடங்கும் திறமையினை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது. இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்துறை சார்ந்த திட்டங்களை ஆய்வு செய்யும் வகையில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களில் 90% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது 100% வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
அவ்வமயம் அரசு பணியில் இருக்கும் போது இயற்கை எய்திய அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 04 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களுக்கு ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட அகில இந்திய தொழிற்தேர்வில், கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் 26 முதல்வர்களை பாராட்டி அமைச்சர் விருதுகள் வழங்கினார். மேலும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 நிறுவனத்திரும், 950 வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


