தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணி குறித்த கோரிக்கை மனு பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உடனிருந்தனர். இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு:
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.