குன்னூர் : குன்னூர் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியை ஒட்டி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
தற்போது குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுமாடு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் கரடிகள் தொடர்ந்து ரேஷன் கடை மற்றும் பெட்டி கடைகளில் புகுந்து உணவு பொருட்களை சூறையாடுவது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இது சம்பந்தமாக குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடிகள் வருவதற்கு காரணம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.இருந்தபோதிலும் அப்பகுதியில் சாலையோரங்களில் குப்பைகளும், மீதமாகிய உணவுப் பொருட்களையும் கொட்டப்படுவதால் இதனை உட்கொள்வதற்காக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடிகள் தற்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன என்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி திரியும் கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடிப்பதற்கு திட்டமிட்டதோடு, அப்பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காத கரடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து போக்கு காட்டி வருகிறது. தொடர்ந்து அந்த கரடியை கண்காணித்து வருவதாகவும், விரைவில் அதனை பிடிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.