தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியிலேயே சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் தற்போது குற்றாலத்தில் முழுமையாக சீசன் களைகட்டி வந்தது. இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வந்தது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.