காங்கிரஸ் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்; பீகாரில் பெருந்திரளாக கூடிய இளைஞர்கள்: நிதிஷ் அரசை கடுமையாக சாடிய ராகுல்
புதுடெல்லி: பீகாரில் காங்கிரஸ் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியது குறித்து ஆளும் நிதிஷ் அரசை ராகுல்காந்தி கடுமையாக சாடினார். பீகாரில் நிலவும் கடுமையான வேலைவாய்ப்பின்மைப் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாட்னாவில் ‘மகாரோஜ்கார் மேளா’ (மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்) சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாமில், வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெருந்திரளாகக் கூடினர்.
இந்த மாபெரும் கூட்டம், பீகாரில் வேலைவாய்ப்பின் தேவை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. வேலைவாய்ப்பு முகாமில் கூடிய கூட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ‘மகாரோஜ்கார் மேளாவில் கூடிய மாபெரும் கூட்டத்தை பார்க்கும் ேபாது, பீகார் மாநில இளைஞர்களுக்கு இனிமேல் வெற்றுப் பேச்சுகள் வேண்டாம்; அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேலைவாய்ப்புகளே தேவை. பாஜக மற்றும் நிதிஷ் குமார் அரசு, பீகாரை வேலைவாய்ப்பின்மை என்ற நெருப்பில் தள்ளியுள்ளதால், லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கிராமம், குடும்பம் என அனைத்தையும் விட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை வழங்கவில்லை; மாறாக தீர்வுகளைக் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வழங்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார். இதற்கிடையே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநிலம் முழுவதும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், 10 லட்சம் அரசு வேலைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.