எம்பிக்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தம்.. அவைக்குள் ராணுவ நடவடிக்கை ஏன்?: திருச்சி சிவா பேட்டி
டெல்லி : வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் ஆளும் ஒன்றிய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டால் மத்திய தொழிற்படை பாதுகாவலர்கள் மூலம் ஒன்றிய அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில், ஆளும் பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திருச்சி சிவா தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழலை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே உருவாக்குகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி குரல் எழுப்பினோம். அவை மையப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது எம்.பி.க்களைசி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பெண் எம்.பி.க்களை கூட வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். தீவிரவாத தாக்குதலை தடுக்க வந்ததை போன்ற அச்ச உணர்வை வீரர்கள் எற்படுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அவையில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடந்து கொள்கின்றனர். அவையில் துணை ராணுவ படையினர் நுழைந்தது ஏதோ ராணுவ நடவடிக்கை எடுப்பது போன்று இருந்தது."இவ்வாறு தெரிவித்தார்.