கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்: பிரகதீஸ்வரர் கோயிலில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு தரிசனம்
திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நேற்று நடந்த ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கோயிலில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். மாலத்தீவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்றுமுன்தினம் இரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, வாகைகுளம் பகுதியில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், ரூ.4,900 கோடி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி நேற்று காலை அரை மணி நேரம் ஓட்டலில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் கார் மூலம் காலை 11.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டார். 11.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஹெலிகாப்டரில் மோடி சென்றார். முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் அமர்ந்து தியானம் செய்தார். கோயில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமான தொடக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் பயணத்தின் 1000 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் ஆடி திருவாதிரை விழா ஆகிய முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நுழைவு பகுதியில் பிரதமரின் முகமூடி அணிந்து நின்ற மாணவர்கள் பிரதமரை வரவேற்றனர். விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சைவ சித்தாந்த மடங்களை சேர்ந்த 36 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் திருவாசக பாராயணம் நடந்தது. தேவாரப்பாடலை 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் பாடினர். இதையடுத்து ஆதீனங்களின் சிந்தாந்தம் பற்றிய சொற்பொழிவு நடந்தது.
தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசையை சுமார் 15 நிமிடங்கள் பிரதமர் கேட்டு ரசித்தார். அப்போது, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்பி திருமாவளவன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி, கங்கைகொண்ட சோழபுரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* 2ம் நாளாக வேட்டி, சட்டையில்...
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்து பங்கேற்றார். நேற்று முன்தினம் தூத்துக்குடி விழாவிலும் மோடி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார்.
* கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த முதல் பிரதமர்
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் நேற்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். மேலும் ஆடி திருவாதிரை விழாவிலும் பங்கேற்றார். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழக அரசு சார்பில் மோடிக்கு வீணை பரிசு
கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பக்கலைகள், அதன் அழகுகளை கண்டவாறு சிறிது தூரம் நடந்து துர்க்கை அம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அம்மனை வழிபாடு செய்து சிறிது நேரம் தியானம் செய்தபின் விழா மேடைக்கு பிரதமர் வந்தார்.
அப்போது ஓதுவார்கள் திருமுறைகளை பாடி வரவேற்றனர். நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சை பெரிய கோயில் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் கலைநுட்பத்துடன் வடிமைக்கப்பட்ட வீணை புகைப்படத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார்.
* திருச்சி, அரியலூரில் பிரதமர் மோடி ரோடுஷோ
ஓட்டலில் இருந்து கார் மூலம் காலை 11.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு ரோடுஷோ நடத்திய படி பிரதமர் மோடி புறப்பட்டார். கன்டோன்மென்ட், ஒத்தக்கடை, தலைமை தபால் நிலையம், டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக சென்று 11.30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தார். பிரதமரை வரவேற்க தனியார் ஓட்டல் அருகே இருந்து ஏர்போர்ட் வரை 3 இடங்களில் சிறிய மேடை, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பாஜ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் கார் மீது மலர் தூவி வரவேற்பு அளித்தனர். காரில் சிரித்த முகத்துடன் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் சென்றார். இருப்பினும், எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் அப்செட்டானதாக கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஹெலிகாப்டரில் மோடி சென்றார்.
பொன்னேரி ஹெலிபேடு தளத்தில் இறங்கிய மோடி, அங்கிருந்து காரில் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு ரோடுஷோ நடத்தியபடி சென்றார். அப்போது பொன்னேரியிலிருந்து கோயில் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜ தொண்டர்கள், மக்களை பார்த்து காரிலிருந்தபடியே பிரதமர் மோடி கையசைத்தபடி சென்றார். அங்கும் கூட்டம் குறைவாகவே இருந்தது.