சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.91.42 கோடியில் 26 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.91.42 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பெரும்பாக்கம் பூங்காவில் ரூ.6.94 கோடி செலவில் உட்புற இறகுபந்து அரங்கம், கைப்பந்து மற்றும் சிறிய கால்பந்து மைதானம், திறந்தவெளி அரங்கம், சிறார் விளையாட்டு பகுதி, யோகா தளம், நடைபாதை, பசுமை புல்வெளி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா, வில்லிவாக்கம், பாடி மற்றும் வடபழனியில் உள்ள மேம்பாலங்களின் கீழ், திறந்தவெளி அரங்கம், நீருற்று, நடைபாதை, பூப்பந்தல், அலங்கார விளக்குகள், இருக்கை வசதிகள், பசுமையான புல்வெளிகள், வாகனம் நிறுத்துமிடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் ரூ.11.50 கோடி செலவில் மேம்பாலங்களின்கீழ் அழகுபடுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.18.44 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் அயனாவரம், கொளத்தூர் தொகுதி ஜவகர் நகர், திரு.வி.க.நகர் தொகுதியில் சுப்புராயன் தெரு, பக்தவச்சலம் பூங்கா, புதிய வெங்கடேசபுரம் மற்றும் மங்களபுரம், ஆர்.கே.நகர் தொகுதியில் செரியன் நகர், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ராயபுரம் தொகுதியில் சிங்காரவேலர் நூலகம், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் எருக்கஞ்சேரி, எழும்பூர் தொகுதியில் இராட்டிலர் தெரு மற்றும் துறைமுகம் தொகுதியில் சண்முகம் சாலை ஆகிய 13 இடங்களில் ரூ.31.11 கோடியில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கும் பணிகள்,
திரு.வி.க. நகர் - ஏகாங்கிபுரம் மற்றும் மங்களபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள், கன்னிகாபுரம், புளியந்தோப்பு, வெங்கடேசபுரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளை ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள், ராயபுரம், பெரம்பூர் மற்றும் வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் ரூ.3.84 கோடியில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள், கோயம்பேட்டில், கைவண்ண அங்காடிகள், அரங்கங்கள், உணவருந்தும் கூடங்கள் மற்றும் பொது வசதிகளுடன் கூடிய கைவண்ணம் சதுக்கம் ரூ.32.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள்,
மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை ரூ.18.45 கோடியில் பாரம்பரிய வழித்தடத்தை பாதை அடையாளங்கள், தகவல் பலகைகள், தெரு விளக்குகள், பார்வை மேடைகள் மற்றும் நடைபாதைகளுடன் கூடிய தெரு வடிவமைப்பு மூலம் அழகுபடுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.91 கோடியே 42 லட்சத்தில் 26 புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் பங்கேற்றனர்.