Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்? விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை: 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைதேர்தல் வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்எவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேசியஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுயேட்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 82.48% வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் துணைராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதபடை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட உள்ளது. முதலில் தபால் ஓட்டுபெட்டி எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகளுக்கு 2 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டு ஒரே சுற்றில் எண்ணி முடிக்கப்படுகிறது. பின்னர், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணி முடிக்கப்படுகிறது. காலை 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் என்று பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் கூறினார்கள். இதனால் இடைதேர்தல் முடிவை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. அதேசமயம் அதிமுக, தேமுதிக இடைத்தேர்தலை புறக்கணித்ததால் குறைந்த வாக்குசதவீதம் பதிவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 82.48 சதவீதம் பதிவாகியிருந்தன. இதனால் இந்த தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.