Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று ஆவணி மாத பவுர்ணமி.. திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். ஆவணி மாதத்திற்கான பவுர்ணமியானது அவிட்ட நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால், இதை ஆவணி அவிட்டம் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று. பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி நாளை 20-ந் தேதி அதிகாலை 1.02 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி இரு தினங்களுக்கு முன்னிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.