ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!
டெல்லி : ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு மாநிலங்களை தவிர நாட்டின் பிற பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும். செப்டம்பர் மாதம் வழக்கத்திற்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவ மழையின் முதல்பாதி காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31 வரை நாட்டில் 474 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது.
இது வழக்கமான மழைப் பொழிவை விட 6% அதிகமாகும். இந்த நிலையில், தென் மேற்கு பருவமழையின் 2ம் பாதி காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழைப் பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் கொல்கத்தா உள்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 6 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கக் கடலில் ஆக.7ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது, "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.