Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மாவு ஆலையில் இறக்கி வைத்தபோது சிக்கியது:காரில் கடத்தி வந்த 1350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:டிரைவர் உள்பட 2 பேர் கைது

சேலம்: சேலத்தில் காரில் கடத்தி வந்த 1350 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மாவு ஆலை அருகே நின்ற காரில் இருந்து சிலர் மூட்டைகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அது ரேஷன் அரிசி மூட்டைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவு ஆலைக்குள் சென்று ஆய்வு செய்தபோது அங்கும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் சேலத்தாம்பட்டி பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி வந்து அதற்கு பாலீஷ் போட்டு கோழிப்பண்ணை மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட டிரைவரான பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (50) புரோக்கரான பழைய சூரமங்கலம் சாமியப்பன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலா 50 கிலோ கொண்ட 27 மூட்டைகளில் இருந்த 1350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அந்த ஆலையின் உரிமையாளர் கோகிலா என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சாமியப்பன் மற்றும் தலைமறைவாக உள்ள கோகிலா ஆகியோர் மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.