Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, 2025-26 ஆம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், Miranda House, University of Delhi போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 98 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளும், 36 பழங்குடியினர் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. சிறந்த உட்கட்டமைப்புடன், பள்ளிகளின் கல்வித் தரம் கடந்த நான்காண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. சிறப்பான முன்னெடுப்புகள் காரணமாக 2022 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முறையே 82%, 84.55% லிருந்து, 2025ஆம் ஆண்டில் 91.85%, 95.5% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் உயர்வாகும்.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவித்து JEE / CLAT /NIFT EE / CUET போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவீனங்களான கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் தமிழ்நாடு அரசே வழங்கி வருகிறது.

மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆன்-லைன் வாயிலாகவும், நேரடியாகவும் (Online / Offline) நடத்தப்படுவதோடு, நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்தல், நுழைவுத் தேர்வு மையத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல், நுழைவுத் தேர்வுகளின் இறுதி முடிவுகள் வெளியான பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களை கலந்தாய்வில் (Counselling ) பங்கேற்பதற்கு தயார் செய்தல், கல்லூரிகளில் பிடெக்., பி.இ., போன்ற பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கு உளவியல் ரீதீயாக மாணவர்களை தயார் செய்து, விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கவும் அரசு உதவுகிறது.

அத்துடன் புதிய முயற்சியாக CLAT மற்றும் CUET நுழைவுத் தேர்வுக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டே பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்குப் பின்னரும் அக்கல்வி நிறுவனங்களின் தன்னார்வ வழிகாட்டுநர் (Mentorship) மூலமாக அரசு மாணவர்களை வழிநடத்தி வருகிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்ற 16 மாணவர்கள் JEE, NIFT-EE, CUET, CLAT போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முன்னணி உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT, NIFT, FDDI (Footwear Design and Development Institute) போன்ற நிறுவனங்களில் சேர்ந்து சிறந்த முறையில் பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் தொடர் முன்னெடுப்பின் காரணமாக 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகளில் தேர்வு பெற்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளைச் சார்ந்த 136 மாணவ, மாணவியர்களுக்கு இன்றையதினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல ஆணையர் த.ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.