Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பலாப்பழத்தை ருசிக்க குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்: மக்கள் அச்சம்

குன்னூர்: குன்னூர் அருகே பலாப்பழத்தை ருசிக்க குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள தனியார் தோட்டங்களிலும், அரசு தோட்டக்கலை பண்னை தோட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள பலா மரங்களில் பலாப்பழம் காய்த்துள்ளன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் குன்னூரை நோக்கி படையெடுத்து வருகின்றன. மேலும் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனிதனி குழுக்களாக பிரிந்து மலைப்பாதையில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என்.ஆர் குடியிருப்பு பகுதி மரத்தில் உள்ள பலாப்பழங்களை ருசிக்க ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானையை சாலைக்கு வராமல், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், காட்டு யானையை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள கடைகளில் பலா பழங்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.