Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியில் சோகம் ராட்சத சிமென்ட் தூண் விழுந்து ஜார்க்கண்ட் தொழிலாளி பலி: மற்றொரு வாலிபர் படுகாயம்

சென்னை: சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேனின் செயின் அறுந்து விழுந்ததில் ராட்சத தூண் மீது அமர்ந்திருந்த ஜார்க்கண்ட் தொழிலாளி கீழே விழுந்ததில் பரிதாபமாக பலியானார். மேலும் மற்றொரு வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் மெட்ரோ தூண்களை மேலே தூக்கி தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. இதில், 30 டன் எடை கொண்ட கான்கிரீட் ராட்சத சிமென்ட் தூணை ராட்சத கிரேன் மூலம் தூக்கி 50 அடி உயரத்தில் இருந்த மற்றொரு தூணின் மீது வைக்க முயற்சி செய்தனர். அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்து கீழே விழுந்ததில் அந்த தூண் மீது அமர்ந்து இருந்த பிக்கி குமார் (26) மற்றும் சந்தோஷ் லக்காரா (20) ஆகியோர் தூணுடன் கீழே விழுந்தனர்.

அப்போது 2 இளைஞர்களும் படுகாயமடைந்தனர். அதில் பிக்கி குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய சந்தோஷ் லக்காராவை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிக்கி குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.