கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது: 2 இளம் பெண்கள் மீட்பு
சென்னை: நெற்குன்றம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கல்லூரி மாணர்கள் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்தது.
அதன்படி நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வீட்டிற்கு அடிக்கடி வாலிபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராஜா(55) 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. உடனே ராஜாவை படித்து விசாரணை நடத்திய போது, நெற்குன்றம் பகுதியை சுற்றி அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளதால், அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, கல்லூரியில்படிக்கும் மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
அதற்காக தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் புரோக்கர் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்டகப்பட்டனர். பாலியலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.