பெரம்பூர்: கொடுங்கையூரில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு நீக்கியபோது ஆண் குழந்தை சடலம் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக்(48). இவர் வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்துள்ளார். இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது குறுக்குத் தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை ஆட்களை வைத்து திறந்து பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முகமது ரபீக் கொடுத்த தகவல்படி, கொடுங்கையூர் போலீசார் சென்று குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘’குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் கழிவுநீர் தொட்டியில் குழந்தையை போட்டார்களா, தகாத உறவில் பிறந்ததால் கொன்றார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.