செய்யாறு அருகே பல கிராம மக்கள் செல்லும் முக்கிய சாலையில் ஜல்லிகழிவுகள் கொட்டியதால் போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்களில் செல்ல முடியாமல் தவிப்பு
செய்யாறு: செய்யாறு அருகே பல கிராம மக்கள் செல்லும் முக்கிய சாலையில் இரவில் ஜல்லிகழிவுகள் கொட்டியதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள கிளியாத்தூர்-பாப்பாந்தாங்கல் பிரதான சாலையில் உள்ளது நெடும்பிறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலையின் குறுக்கே நேற்று நள்ளிரவில் லாரியில் ஜல்லிகழிவுகளை ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். ஆற்காடு சாலை-காஞ்சிபுரம் சாலையை இணைக்கும் பிரதான சாலையான கிளியாத்தூர்-பாப்பாந்தாங்கல் சாலையில், நெடும்பிறை, வன்னியந்தாங்கல், பெரியகோவில், தூளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இந்த கிராம மக்கள் இரவு, பகலாக இந்த சாலையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு சென்று இரவில் பைக்கில் வீடு திரும்புபவர்கள் அதிகம். இந்த சாலையின் குறுக்கே ஜல்லிகழிவுகள் நேற்றிரவு கொட்டியதால் அவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த செய்யாறு சிப்காட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் கம்பெனி பஸ்சில் ஊருக்கு திரும்பினர். ஆனால் பஸ் வர முடியாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர். இந்த சாலையில் நெடும்பிறை, கணேசபுரம் மற்றும் தூளி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் இந்த சாலைகள் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளன.
எனவே, கல்குவாரி லாரிகள் செல்வதற்கு வசதியாக சாலையில் உள்ள பள்ளங்களில் கொட்டி சமன் செய்வதற்காக குவாரியினரே இந்த ஜல்லிகழிவுகளை கொண்டு வந்து கொட்டினார்களா? அல்லது வேறு யாராவது கொட்டினார்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த சாலையில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்லும் நெடும்பிறை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில், போக்குவரத்து நிறைந்த சாலையில் இரவில் ஜல்லிகழிவுகளை கொட்டிய லாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவற்றை உடனே அகற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.