சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, போன்ற சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்துள்ள நடிகை ராஜேஸ்வரி (வயது 39) சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை பிராட்வேயைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, சதீஷ் என்பவரைக் காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த டிசம்பர் 7ம் தேதி ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு, நடிகை ராஜேஸ்வரி கணவரைப் பிரிந்து சைதாப்பேட்டையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி, நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நடிகை ராஜேஸ்வரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


