சென்னை: 2011-2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,222 பேரில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல். ஏக்கள் எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். இதை பதிவு செய்த கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதுவரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 1350 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.