செந்தில்பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்பட்டால் என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்படும்? அமலாக்கத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், ஒருவேளை அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதியளித்தால் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார்.
அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்ல உள்ளதால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க இயலாது எனவும் அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஒருவேளை அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படும்பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 8ம் எட்டாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.