சென்னை: சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, மூத்த ஒளிப்பதிவாளர் பாபு (88) உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல ஒளிப்பதிவாளரான பாபு என்கிற அனந்தகிருஷ்ணன் (88), வயது மூப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை 7:40 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவரது மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்ட நிலையில், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பாபுவின் இறுதிச்சடங்கு, நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் 108 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக 45 படங்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த 27 படங்களுக்கும், கமல்ஹாசன் நடித்த 12 படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய ‘கனிமுத்து பாப்பா’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதற்கு முன், ஒளிப்பதிவாளர் கே.எஸ். பிரசாத்திடம் உதவியாளராகப் பணியாற்றியபோது, எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்னமிட்ட கை’ படத்தின் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். சிவாஜி கணேசன் நடித்த ‘கவரிமான்’, ‘ரிஷிமூலம்’ ஆகிய படங்களுக்கும், புகழ்பெற்ற ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மனோரமா நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிக்கும் இவரே ஒளிப்பதிவாளர்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கழுகு’, ‘ராணுவ வீரன்’, ‘போக்கிரி ராஜா’, ‘பாயும் புலி’, ‘நான் மகான் அல்ல’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இவரை ‘என் கண் போன்றவர்’ என்று பெருமையுடன் குறிப்பிடுவார். என்.டி. ராமாராவ், சோபன் பாபு, அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள பாபு, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.