செங்குன்றம் அடுத்த வடகரை கிரான்ட் லைன் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழிச்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
புழல்: செங்குன்றம் அருகே வடகரை கிரான்ட் லைன் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, 4 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் அடுத்த வடகரை பைபாஸ் சாலை சிக்னலில் இருந்து பாப்பாரமேடு, வடகரை, கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், மாதவரம் வரை செல்லும் மாதவரம் நெடுஞ்சாலை, வடகரை பைபாஸ் சாலையில் இருந்து கிராண்ட் லைன் வரை தினசரி அதிகளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இச்சாலையில் வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி மற்றும் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளதால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள், குறிப்பாக கண்டெய்னர் லாரிகள் செல்வதற்கு தடை செய்ய வேண்டும். மேலும், வடகரை அண்ணா சிலையில் இருந்து கோட்டூர் வரை செல்லும் யூனியன் சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருவழி சாலையாக மாற்றிடவும், புள்ளி லைன் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபம் சாலையிலிருந்து வெளியே வரும் கனரக வாகனங்களால், குறிப்பாக கண்டெய்னர் லாரிகளால் வடகரை செங்குன்றம் சந்திக்கும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே, இச்சாலையிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வடகரை கிரன்ட் லைன் சாலையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்
