Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செங்கோட்டையன் ஆதரவாளர் 40 பேரின் பதவிகள் பறிப்பு: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

கோபி: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கடந்த மாதம் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். அடுத்த நாளே அவர் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பதவிகளையும், அவரது ஆதரவாளர்களான மாஜி எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 13 பேரை கட்சி பதவிகளில் இருந்தும், 2 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் அரங்கில் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தலைமையில் நடந்தது. அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தார்.

அதேபோன்று அந்தியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். அதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கே.கே. கந்தவேல்முருகன், இணைச்செயலாளர் அனுராதா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எஸ்.ஆர். செல்வம், இணைச்செயலாளர் கே.பி. சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 40 பேர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

* அணி தாவிய கவுன்சிலர்

கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் பதவி பறிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான கவுன்சிலர் நாகராஜ், நேற்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.