Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு சேலத்தில் மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: பன்னாரி எம்எல்ஏ, கோபி, அந்தியூர், பவானி நிர்வாகிகள் சந்திப்பு

சேலம்: செங்கோட்டையன்-அமித்ஷா சந்தித்த நிலையில், சேலத்தில் மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும், 10 நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனிப்பட்ட செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஏராளமானோர் கூடியதால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அனைவரையும் தன்னிடம் அழைத்து வருமாறு ஆதரவாளர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 7ம் தேதி நள்ளிரவு சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடப்பாடி வந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு இருந்து ஏராளமான நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், சண்முகநாதன், செங்கோட்டையனுக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்ட புறநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களை தொடர்ந்து சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், எம்கே செல்வராஜ், சேலம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

2வது நாளாக நேற்றும் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தனர். செங்கோட்டையனின் முக்கிய ஆதரவாளரான நகர செயலாளர் கணேஷ் மற்றும் கோபிசெட்டிப்பாளையம், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்தனர். பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரியும் வந்தார். இதனால் நெடுஞ்சாலை நகரில் கூட்டம் அதிகரித்திருந்தது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்த பண்ணாரி கூறுகையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று நடப்போம். பொறுப்பாளர்கள் அனைவரும் அவருடன் தான் இருப்போம்’ என்றார்.

இதேபோல் முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இவர் செங்கோட்டையனுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தவர்களில் ஒருவராவார். அடுத்தவாரம் தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார். இது தொடர்பாக அவர் பேசியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், எடப்பாடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பகல் 2.15 மணிக்கு சேலத்தில் இருந்து கோவைக்கு பிரசாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

* செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 4 பேர் பதவி பறிப்பு;2 பேர் டிஸ்மிஸ்

அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் என 9 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களான அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏவிஎம்.செந்தில் என்கிற கோடீஸ்வரன், சத்தி நகர ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கமேஷ் ஆகியோர் கட்சி பொறுப்பில் இருந்தும்,

அத்தாணி பேரூர் கழக முன்னாள் துணைச்செயலாளர் மருதமுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கி நேற்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சி பொறுப்பு மற்றும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.