புதுடெல்லி: இந்தியாவின் செமிகண்டக்டர் கட்டமைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘செமிகான் இந்தியா-2025’ மாநாட்டின் தொடக்க விழா டெல்லியில் நேற்று நடந்தது.
மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
கருப்பு தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய் முந்தைய நூற்றாண்டை வடிவமைத்தது. தற்போது 21ம் நூற்றாண்டை டிஜிட்டல் வைரம் எனப்படும் சிறிய சிப்கள் தான் வடிவமைக்க உள்ளன. அளவில் சிறிதாக இருந்தாலும் இந்த சிப்கள் உலகளாவிய முன்னேற்றத்தை கணிசமாக துரிதப்படுத்தும். உலக செமிகண்டக்டர் துறை ஏற்கனவே 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி உள்ளது. வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருக்கும்.
கடந்த 2021ல் செமிகான் திட்டத்தை தொடங்கிய இந்தியா, 2023ல் ஒப்புதல் அளித்து 2024ல் முதல் செமிகண்டக்டர் ஆலையை நிறுவியது. மேலும் பல ஆலைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தற்போது 10 செமிகண்டக்டர் திட்டங்கள் நடந்து வருகின்றன. 18 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
இனி செமிகண்டக்டர் துறையில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இதற்காக வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை மறுசீரமைத்து வருகிறோம். எனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் என உலகம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அனைத்து எதிர்பார்ப்பு, நம்பிக்கை, மதிப்பீட்டை விட மிஞ்சி உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதார சுயநலத்தால் உருவாக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அனைத்து துறையிலும் இந்தியா உற்சாகத்துடன் காணப்படுகிறது’’ என்றார். இந்தியாவை செத்த பொருளாதாரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.