Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வற்றல் ஸ்பெஷல் !

சென்னையில் தற்போது அவ்வப்போது மழை வந்து செல்கிறது. மொட்டை மாடியில் துணிகளைக் காயப் போட்டால் இரவில் மழை வந்து நனைத்து விடுகிறது. இருந்தபோதும் பகல் நேரங்களில் நல்ல வெயில் அடிக்கிறது. விரைவில் தொடர் மழை சீசன் வரலாம். இப்போது நிலவும் வெயிலைக் கொண்டு வற்றல் வகைகளைச் செய்து அசத்துங்க!

வெண்டைக்காய் வற்றல்

தேவையானவை:

வெண்டைக்காய் - ஒரு கிலோ,

தயிர் - ஒரு கப்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பிஞ்சு வெண்டைக்காய்களாக பார்த்து வாங்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். மாலையில் தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக் காய்களையும் போட்டுக் கலந்து 3, 4 நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும். இதைப் பொரித்தும் சாப்பிடலாம், குழம்பு செய்யவும் பயன்படுத்தலாம்.

கத்தரிக்காய் வற்றல்

தேவையானவை:

கத்தரிக்காய் - கால் கிலோ,

புளித்தண்ணீர் - சிறிதளவு,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒருநாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் புளித்தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும். இதை வதக்கிப் பயன்படுத்தி குழம்பு செய்தால் ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.

மணத்தக்காளி வற்றல்

தேவையானவை:

மணத்தக்காளி காய் - கால் கிலோ,

தண்ணீர் - அரை லிட்டர்,

உப்பு - 2 தேக்கரண்டி.

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளி காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்தவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும். மணத்தக்காளி வற்றலை வதக்கிப் பயன்படுத்தி குழம்பு வைத்தால், சுவையும், மணமும் அள்ளும். இதை நெய்யில் வதக்கி, மிக்ஸியில் பொடி செய்து சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த வற்றலை வாரம் ஓரிரு முறை சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. இது, கர்ப்பப்பையில் புண் வராமல் தடுக்கும்.