Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை பாலாற்றில் குதித்த நபரை தேடும்பணி 2வது நாளாக தீவிரம்: தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் குதித்த நபரை தேடும் பணி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரால் 2வது நாளாக இன்றும் நடந்தது. ராணிப்பேட்டை பாறை தெருவை சேர்ந்தவர் பிரசாந்த்(40). இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் வெளியே சென்றுள்ளார். பாலாறு பழைய மேம்பாலத்தில் சென்றபோது பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாற்றில் குதித்த பிரசாந்த்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் அதிகளவு ஓடுகிறது.

இதனால் பிரசாந்த் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு ேதடுதல் பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தேடியும் பிரசாந்த் கிடைக்கவில்லை. மேலும் இரவாகி விட்டதாலும், ேபாதிய வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து 20 பேர் கொண்ட குழுவினரும் மீட்பு உபகரணங்களுடன் ராணிப்பேட்டைக்கு வந்தனர். இவர்கள் பாலாற்றில் குதித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினரும் தேடுதல் பணியை தொடர்ந்தனர்.

ஆர்டிஓ ராஜி, தாசில்தார் ஆனந்தன், திமுக மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சிவா ஆகியோர் மீட்பு பணியை பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.