பள்ளி ஆசிரியைகள் உருவகேலி மாணவி தீக்குளித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் வால்பாறையில் பரபரப்பு
கோவை: வால்பாறை அரசு பள்ளியில் ஆசிரியைகள் உருவகேலி செய்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்த சக்திவேல் குமரன் (39). வல்சல குமாரி ஆகியோரது மூத்த மகள் முத்து சஞ்சனா (14). இவர், வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் அவரது பள்ளியில் பணியாற்றி வரும் 3 ஆசிரியைகள் எனவும், அவர்கள் மாணவியை மிகவும் டார்ச்சர் செய்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை சக்திவேல் குமரன் கூறியதாவது: நான் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். எனது மூத்த மகள் முத்து சஞ்சனா 9ம் வகுப்பு படித்து வந்தார். இரண்டாவது மகள் முத்து சாய்னா 5ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 10ம் தேதி காலை எனது மூத்த மகள் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நான் மருத்துவமனையில் சென்று பார்த்தேன்.
பின்னர், எனது மகளிடம் கேட்ட போது பள்ளியில் உள்ள ஆசிரியைகள், மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து மன உளைச்சலை ஏற்படுத்தினர் எனவும், தனது உருவம், நிறத்தை குறித்து கேலி செய்து வந்ததாகவும் கூறினார். ஆசிரியைகள் மூன்று பேரும் தொடர்ந்து செய்த டார்ச்சர் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். எனவே, ஆசிரியைகள் 3 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், சிஇஓ ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


