காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாராபுரம் சாலை, பாரதியார் நகரில் உள்ள சமூகநீதி விடுதியில் 50 மாணவர்கள் தங்கி அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி காப்பாளர் மாரிமுத்து (45), தற்காலிக வார்டனாக காங்கயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவரான, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் (24) என்பவரை 2 ஆண்டுகளாக விடுதியில் தங்கவைத்து மாத சம்பளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதில், திருப்பூர் சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது விடுதியை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர் அரவிந்த் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று கலெக்டர் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்காலிக வார்டனாக இருந்த கல்லூரி மாணவர் அரவிந்த், 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


