Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிகளில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: இந்தியா முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது.

மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.