Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பரிந்துரை மீது 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை :தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தனியார் பள்ளிகள் இயக்குனரின் பரிந்துரை மீது 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரீசிலீத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாகவும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.