Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய சமூக பிரிவுகளில் வசதியானவர்களை இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு; விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருத்து

புதுடெல்லி: அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய பிரிவுகளில் உள்ள வசதி படைத்தவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெரும்பான்மையான பலன்களைப் பெற்றுவிடுகின்றனர். இதனால், அதே சமூகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டின் வாய்ப்புகளை இழக்கின்றனர். இதுபோன்ற நடைமுறையானது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கிறது. எனவே அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டிற்கான பலன்கள் உண்மையான ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மல்யா பக்‌ஷி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது நீதிபதிகள் கூறுகையில்,‘‘பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர், இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் அரசுப் பதவிகளை அடைந்துள்ளனர். அவர்கள் சமூக மற்றும் ொருளாதார ரீதியாகவும் முன்னேறியுள்ளனர். அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியையும் வசதிகளையும் வழங்க முடிகிறது. இத்தகைய சூழலில் வசதி படைத்த அவர்கள், தங்கள் சமூகத்தில் உள்ள வறுமையில் வாடும் மற்றவர்களின் வாய்ப்புகளைப் பறித்து, இடஒதுக்கீட்டின் பலன்களைத் தொடர்ந்து அனுபவிப்பது சரியான ஒன்று கிடையாது. அது சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். தற்போது இருக்கும் சூழலில் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கை மற்றும் மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இதில் முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘‘இட ஒதுக்கீட்டின் பலன்கள் மிகவும் பின்தங்கியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வசதி படைத்தோர் பட்டியலை (கிரிமிலேயர்) இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்குவதற்கான உரிய விதிகளை வகுக்கு வேண்டும் எனவும் தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.