ரியாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு தலைநகர் ரியாத்தில் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் சாராம்சம் என்னவென்றால் வெளிநாடுகளிடம் இருந்து இருநாடுகளை பாதுகாப்பதாகும். மேலும் வெளிநாடுகள் தாக்குதல் நடத்தும்போது இருநாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது பாகிஸ்தான் மீதான எந்த ஒரு தாக்குதலும் சவுதி அரேபியா மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளப்படும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்த ஒரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை நாம் தாக்கும்போது சவுதி அரேபியா நேரடியாக தலையிட்டு உதவிகளை செய்யும். இது நம் நாட்டுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானிடம் மட்டும்தான் அணுஆயுதம் உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், வங்கதேசம், துருக்கி உள்பட வேறு எந்த இஸ்லாமிய நாடுகளிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்படியான சூழலில் இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெ்றால் சவுதி அரேபியா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தேவையென்றால் பாகிஸ்தான் தனது அணுஆயுதத்தை கூட பயன்படுத்தும் என இந்த ஒப்பந்தத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை:
சவுதி அரேபியா- பாகிஸ்தான் இடையே ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் இந்த முன்னேற்றம் பரிசீலனையில் உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. நமது தேசிய பாதுகாப்புக்கும், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.