Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிலாளர்களை அடிமைகளாக்கும் கஃபாலா முறை சவுதி அரேபியாவில் ரத்து: 23 லட்சம் இந்தியர் உட்பட 1.3 கோடி பேருக்கு விடுதலை

ரியாத்: சவுதி அரேபியாவில் பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 23லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஃபாலா முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த முறையில் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடிமையாக்கி அவர்கள் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்தனர்.

ஒரு தொழிலாளி வேலையில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாமா, நாட்டைவிட்டு வெளியேறலாமா அல்லது சட்ட உதவியை நாடலாமா என்பதை முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்க முடியும். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையானது, வளைகுடா நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான குறைந்த விலை வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு உள்ளூர் ஸ்பான்சர் அல்லது கஃபீலுடன் பிணைக்கப்பட்டார். தங்களது ஸ்பான்சரின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்கள் வேலைகளை மாற்றவோ, நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது புகார்களை கூட பதிவு செய்யவோ முடியாது. சமீப காலமாக இந்த முறையில் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள் அதிகரித்தது.

இந்நிலையில் கஃபாலா முறையை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரேபியா அறிவித்து இருந்தது. இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஃபாலா முறையை சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது தொழிலாளர் உரிமைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நலனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த சீர்திருத்தத்தின் கீழ் 23லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.