சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17.09.2025) பிற்பகல் சுமார் 01.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் அகதிகள் முகாம் பகுதியில் வசிக்கும் திருமதி.கௌரி (வயது 50) க/பெ.பாலசிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெம்பக்கோட்டை வட்டம், கோமாளிப்பட்டியைச் சேர்ந்த திரு.காளிமுத்து (வயது 45), எழுவன்பச்சேரி பகுதியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி (வயது 55), திருமதி.மேகலை (வயது 40), திரு.குமரேசன் (வயது 30), கண்டியாபுரம் அகதிகள் முகாம் பகுதியில் வசிக்கும் திருமதி.சிவரஞ்சனி (வயது 48) மற்றும் சிவகாசி வட்டம், மாரனேரி பகுதியைச் சேர்ந்த திருமதி.மாரியம்மாள் (வயது 40) ஆகிய ஆறு நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐந்து நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.