சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராகும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை ஏற்கக்கூடாது: ஜெயராஜ் மனைவி, சிபிஐ ஆட்சேபம்
மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் அப்ரூவராகும் இன்ஸ்பெக்டரின் மனுவை ஏற்கக் கூடாது என ஜெயராஜ் மனைவி, சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்க குற்றப்பத்திரிகை, இரண்டாம் கட்டமாக 400 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 52 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.
இதனிடையே, இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் தர், தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசுக்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவர் ஆக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்’’ என கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ேடார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த மனு மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்ஸ்பெக்டர் தர் மதுரை மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இன்ஸ்பெக்டர் தரின் மனுவிற்கு ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் கொலை வழக்கு மற்றும் தரின் இடை மனு மீதான விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.