Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிய டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் கடந்த 2023ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமான வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், தங்கள் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு கடந்த 2024ம் ஆண்டு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி அமலாக்கத்துறையின் சென்னை மண்டல உதவி இயக்குநர் கிராந்தி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், மாநில போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், 2024ம் ஆண்டு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினர். அமலாக்க துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வழக்கு தொடர்வதற்கு அமலாக்கத்துறைக்கு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதற்கு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தகவல்களை அனுப்பி வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்ள மாநில காவல்துறை போஸ்ட் மாஸ்டர் அல்ல. உத்தரபிரதேசம் பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு மட்டுமே அமலாக்கத் துறையின் கண்களுக்கு தெரிகிறது என்றார். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், பொதுநலன் கருதியே அமலாக்கத்துறை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்றார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், அதே பொதுநலனை சுட்டிக்காட்டி குஜராத் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர முடியுமா?. டில்லி மாநில காவல்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இதே போன்ற ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. எந்த அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதையடுத்து அந்த மனுவை அமலாக்கத்துறை திரும்ப பெற்றது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

* உத்தரபிரதேசம் பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது -தமிழக அரசு வாதம்

* ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறையால் மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? - நீதிபதிகள்