அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உ.பி., பிகார், குஜராத் மாநிலங்கள் ED கண்ணுக்கு தெரியவில்லை - தமிழ்நாடு அரசு
சென்னை : மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு எப்படி உத்தரவிட முடியும்? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் கொள்ளை தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒத்துழைக்கக் கோரியும், அமலாக்கத்துறை தகவலின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரியும் அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 31) நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருண் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் கொள்ளை தொடர்பான தகவல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு எப்படி உத்தரவிட முடியும்? என்று அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை, வழக்கு பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய PMLA சட்டத்தில் அனுமதி உள்ளது என்று குறிப்பிட்டது. அப்போது குறுக்கிட்ட, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், எப்.ஐ.ஆர் பதிவு செய்வது அமலாக்கத்துறையின் தனியுரிமை அல்ல. தகவல்களை அனுப்பி வழக்குப்பதிவு செய்ய கூறினால் அதை ஏற்க மாநில போலீஸ் ஒன்றும் போஸ்ட் மாஸ்டர் அல்ல’ என்று வாதிட்டார். மேலும், பெரிய அளவிலான ஊழல்கள் உ.பி, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்தாலும் அமலாக்கத்துறைக்கு தமிழகத்தின் மீது மட்டுமே கண் இருக்கிறது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
 
  
  
  
   
