ராமேஸ்வரம் : உலக நன்மை வேண்டி ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மாதந்தோறும் பவுர்ணமியில் மாலையில் உலக நன்மைக்காக சமுத்திர ஆரத்தி நடத்தப்படுகிறது. நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.
ஆரத்தி குழுவினர் மாலையில் தீபத்துடன் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதியில் ஊர்வலமாக வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் கும்பங்கள் வைத்து சிவாச்சாரியர்கள் விநாயகர் பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை நடத்தினர்.
பின்னர் பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்டவைகளை கடலில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் ஆன்மீக பெருமக்கள், உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெண்கள் ஏராளமானோர் கடலில் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.