Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விற்பனைக்கு வந்த நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத அணியாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆர்சிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அணி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அணியாகும். 2008ம் ஆண்டு விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட இந்த அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்சிபி அணியை நிர்வகித்து வருகிறது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றதே தவிர குறையவில்லை.

இந்நிலையில் அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர். இருப்பினும் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ஆர்சிபி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விற்பனை செயல்முறையை நிர்வாகம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டயாஜியோ நிர்வாகம் இதற்கு 2 பில்லியன் டாலர் வரையில் (இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடி) மதிப்பீட்டை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆர்சிபி அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.