Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் அருகே பயங்கரம் தலையை துண்டித்து தந்தை, சித்தி படுகொலை: முதல் மனைவியின் மகன் வெறிச்செயல், உடல் பாகங்களை 3 மூட்டையில் கட்டி ஏரியில் வீச்சு

சேலம்: சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுக்கு முன் பழனிசாமியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மனைவி ஜெயந்தி, பிரிந்து சேலத்திற்கு வந்து தனியாக வசித்து வருகிறார்.

இதையடுத்து பழனிசாமி, இரண்டாவதாக ஜெயலட்சுமி (38) என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் முதல் கணவரின் 18 வயது மகளும் வசித்துள்ளார். கடந்த 5 நாட்களாக பழனிசாமி, ஜெயலட்சுமியின் நடமாட்டம் இல்லை. இருவரும் வெளியூர் சென்று விட்டதாக ஆகாஷ் கூறியிருக்கிறார். சந்தேகம் அடைந்த உறவினர்கள், மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார், ஆகாசை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கடந்த 15ம் தேதி இரவு தலையை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் கூறிய ஏகாபுரம் ஏரிக்கு சென்று ஒரு சாக்கு மூட்டையை மீட்டனர். அதனுள் பழனிசாமி, ஜெயலட்சுமி ஆகியோரின் தலை, கை, கால்கள் இருந்தன. தொடர்ந்து வைகுந்தம் தாழையூர் ஏரிக்கு சென்று 2 மூட்டைகளை மீட்டனர். அதனுள் உடல் பாகங்கள் இருந்தன. அவரை பிரேதப்பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஆகாசை கைது செய்து, போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. கடந்த 4 ஆண்டுக்கு முன் ஜெயலட்சுமியை பழனிசாமி 2வது திருமணம் செய்துகொண்டு வரும்போது, அவரது மகளையும் அழைத்து வந்துள்ளார். தற்போது 18 வயதாகும் அந்த இளம்பெண்ணிடம் அவ்வப்போது பழனிசாமி தகாதமுறையில் நடந்துகொண்டுள்ளார். இதற்கு மனைவி ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை பார்த்த ஆகாஷ், கோபம் கொண்டு தந்தை, சித்தியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர்கள், ஆகாசை மிரட்டியுள்ளனர்.

இதனால், கடந்த 15ம் தேதி இரவு கத்தியால், தந்தை, சித்தி ஆகிய இருவரையும் கழுத்தில் வெட்டி படுகொலை செய்து, தலையை தனித்தனியே துண்டித்தும், உடலை கை, கால், மற்ற பாகம் என துண்டு துண்டாக வெட்டி, 3 சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றிச் சென்று, ஏகாபுரம், தாழையூர் ஏரியில் வீசியுள்ளார், என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கொலை சம்பவம் நடந்தபோது, 18 வயது மகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், அப்பெண்ணையும் பிடித்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.