சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை: பெற்றோர் உள்பட 4 பேர் கைது
சங்ககிரி: சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்து விட்டு, ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக நாடகமாடிய பெற்றோர் உள்பட 4 பேரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த சிவகாமிக்கு, கடந்த 9ம்தேதி கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சந்தோஷ், அவரது மனைவி சிவகாமி ஆகியோர், கடந்த 14ம்தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து, இறந்து விட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றுடன் ஊருக்கு வந்தனர். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், உறவினர்களிடம் அதை காண்பித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தோஷ் - சிவகாமி தம்பதியர், தங்களுக்கு பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை, ரூ.1.20 லட்சத்துக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதாக, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது. புகாரின்படி மகுடஞ்சாவடி போலீசார் கடந்த 20ம்தேதி சந்தோஷின் வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது.
அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகாமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு கடந்த 14ம் தேதி விற்றது தெரிய வந்தது. இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.