Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கதவு, நிலை மற்றும் 2 துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று கூறி போலி ஆவணம் தயாரித்து அவற்றை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு, சதீஷ்குமார் மற்றும் பைஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முராரி பாபு மற்றும் சுதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் மற்றும் ஆணையரான வாசுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த 2019ம் ஆண்டு தேவசம் போர்டு ஆணையராக இருந்த வாசு கூறியதால்தான் தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் கொடுத்ததாக இவர்கள் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வாசு 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று 3வது முறையாக இவரிடம் சிறப்பு புலனாய்வுக் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் வாசுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் பத்தனம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள வாசு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இரண்டு முறை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்துள்ளார். வாசு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதை வலியுறுத்தி இன்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.