சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் நேற்று திருவனந்தபுரத்திலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் மாயமான விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் கதவு, நிலை, 2 துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் செம்பு என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதிலிருந்து பெருமளவு தங்கம் திருடப்பட்டது தேவசம் போர்டு விஜிலன்ஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த சில நாட்களாக ஐதராபாத் மற்றும் சென்னையில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இக்குழு நேற்று திருவனந்தபுரத்திலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தியது. 1998ல் விஜய் மல்லையாவின் யுபி நிறுவனத்திடம் இருந்து எத்தனை கிலோ தங்கம் பெறப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.