திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கிய ஒரு சில மணிநேரத்திலேயே முடிவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். தற்போது தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 14ம் தேதி வரையிலும், மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று வரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 26, 27 ஆகிய தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த 2 நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் தலா 5 ஆயிரம் பேருக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். இது ஒருபுறம் இருக்க நேற்று முன்பதிவு தொடங்கியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பல பக்தர்களால் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின்னரே இந்தக் கோளாறு சரியானது. அதன்பிறகு ஒரு சில மணிநேரத்தில் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்த நாட்களில் இனி சபரிமலை செல்ல விரும்புபவர்கள் உடனடி முன்பதிவு மூலம் தான் பாஸ் பெற்று தரிசனம் செய்ய முடியும். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்றுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடைகிறது.


