Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு: இன்று காலை வரை 6.50 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் கூட்டம் குறைந்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்த கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடை திறக்கப்பட்ட கடந்த 16ம் தேதி மாலை 5 மணி முதல் அன்று இரவுக்குள் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் 18ம்படி ஏறினர். மறுநாள் 17, 18 ஆகிய தேதிகளில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் தரிசனம் செய்வதற்கு 10 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையொட்டி தினமும் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரமாக கட்டுப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும் அதைவிட இரு மடங்கு பக்தர்களை அனுமதித்தது தான் சபரிமலையில் ஏற்பட்ட கடும் நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக கட்டுப்படுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலையில் நெரிசல் குறைந்தது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை வரை கடந்த 7 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6.50 லட்சத்தை தாண்டியது. டிசம்பர் 25ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சபரிமலையில் கூட்டம் குறைந்துள்ளதால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக கூட்டம் குறைந்தபோதிலும் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்காததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றதாக கூறி தேவசம் போர்டு சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து இன்று முதல் உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் சபரிமலையில் இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.